வெற்றியாளர்கள் பணத்தைவிட, நேரத்தை மிச்சப்படுத்துவதிலேயே அதிக கவனத்தோடு இருக்கிறார்கள். ஏன் தெரியுமா?
ஒரு கல்லூரியில் பேராசிரியர் மாணவர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.
“உங்களிடம் ஒவ்வொரு நாளும் 86,400 ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கப்படும்… இரண்டு நிபந்தனைகளோடு!
ஒன்று, 86,400 ரூபாயையும் முழுமையாக அன்றே செலவு செய்து விட வேண்டும். சேர்த்து வைக்க முடியாது.
இரண்டாவது, இந்த ரூபாயை வேறு எங்கும் முதலீடு செய்யக் கூடாது; அடுத்தவர்களுக்கு கடனாகக் கொடுக்கவும் இயலாது.
ஒருவேளை நீங்கள் செலவழிக்காவிட்டால் இந்தப் பணம் அனைத்தும் அன்றே காணாமல் போய்விடும்.
இந்தச் சவாலுக்கு தயாரா?” என்று கேட்டார்.
மாணவர்கள் மூளையைக் கசக்கி வழி தேடத் தொடங்கியது ஒருபுறம் இருக்க, உங்களால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
‘நான் பாரதியார் மாதிரி; எனக்கும், கணக்குக்கும் தூரம் அதிகம்‘ என்று சொல்லி நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.
ஏன் என்றால் இந்தச் சவாலை நாள்தோறும் நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள். ஆம், நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம்; மணி ஒன்றுக்கு 60 நிமிடம், நிமிடம் ஒன்றுக்கு 60 வினாடி… இப்போது மூன்றையும் பெருக்கிப் பாருங்கள்.
ஆக, நாளொன்றுக்கு 86,400 வினாடிகள் உங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இப்போது முன் சொன்ன இரண்டு நிபந்தனைகளையும் பொருத்திப் பாருங்கள்.
நேரத்தை திரும்ப உருவாக்க முடியாது என்பதால், இதனை புத்திசாலித்தனமாக எப்படி செலவழிக்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
நமக்குப் பொதுவாக உள்ள பிரச்சனை என்னவென்றால், ‘நேரம் போதவில்லை‘ என்ற கவலைதான். “காலையில் அலுவலகத்திற்கு போய்விட்டு மாலையில் வீடு திரும்பும் வரை தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் எந்த வேலையும் முடிந்தபாடு இல்லை” என்ற வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நேரத்தை முறையாகாத் திட்டமிடாததே இதற்கு கரணம்.
ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகத்தை விட்டு வீடு திரும்பும் முன்னால் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்னவென்று குறித்து வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் அந்த வேலைகளை வெற்றிக்கரமாக செய்து முடிக்கலாம்.
மறுநாள் காலையில் அலுவலகம் சென்று திட்டமிடலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், காலையில் நீங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிற பதற்றத்தில் சில வேலைகளை மறந்து விடக்கூடும். உள்ளே நுழைந்தவுடன் பிறருடன் பேசுவது, மீட்டிங் செல்வது, இ – மெயில் பார்ப்பது போன்றவற்றில் கவனம் திசை மாறும் என்பதால், அப்போது திட்டமிடுவது சற்று கடினமாக இருக்கும்.
இது அன்றாட பிரச்சனைக்குத் தீர்வு என்றால், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பெரியதொரு கோணத்தில் பார்க்கிறபோது, நமக்கு உழைக்க மொத்தம் எவ்வளவு ஆண்டுகள் கிடைக்கின்றன தெரியுமா?
ஒரு இந்தியனின் சராசரி வயது 70 என்று வைத்துக் கொள்வோம். முதல் 20 ஆண்டுகள் படிப்பதில் போய்விடும். கடைசி 10 ஆண்டுகள் உடல் வலுவின்மை காரணமாக பென்ஷனை எதிர்பார்த்தே கரைந்துவிடும். இடைப்பட்ட 40 ஆண்டுகளில் சனி – ஞாயிறுகள், பண்டிகை தினங்கள், அரசு விடுமுறைகள், திருவிழாக்கள், திருமணங்கள், உடல் நலமின்மை போன்றவற்றில் சுமார் 15 ஆண்டுகள் கழிந்துவிடும். மீதம் இருப்பது 25 ஆண்டுகள் மட்டும் தான். இந்த 25 ஆண்டுகளிலும், சராசரியாக மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத்தான் (அதாவது நாளொன்றுக்கு 8 மணி நேரம்) உழைப்பிற்கு ஒதுக்குகிறோம். இதற்குள் நீங்கள் ஓடி ஓடி உழைத்து பணத்தைக் குவித்தாக வேண்டும்.
அதனால் தான் வெற்றியாளர்கள் பணத்தை விட நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
உறங்கி, உறங்கி கழிப்பது, வீணாக ஊரைச் சுற்றுவது, பைசா பிரயோஜனம் இல்லாத வீண் விவாதங்களில் நேரம் செலவழிப்பது, மோட்டு வலையைப் பார்த்து வெட்டியாக அமர்ந்திருப்பது, காதலில் தோல்வியுற்று தாடி வளர்த்துக் கொண்டு தேவதாசாகத் திரிவது… இவற்றிலெல்லாம் வெற்றியாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதில்லை.
மாறாக, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, நிறைய மனிதர்களைச் சந்திப்பது, கண்காட்சிகளுக்கு செல்வது, தாம் சார்ந்து இருக்கும் துறை சம்பந்தமான நூல்களைப் படிப்பது, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களோடு நேரம் செலவழிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.
எனவே நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதன் மூலமே நீங்கள் வெற்றியாளராக முடியும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்… வெற்றியாளர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதைவிட நேரத்தை மிச்சப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது, ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததிலிருந்து தூங்கும் வரை எந்தெந்த வேலைக்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். குறைந்தது, நாளொன்றுக்கு 4 மணி நேரத்தை நீங்கள் வீணாக்கிக் கொண்டிருப்பது தெரியும்.