எதையும் தள்ளிப் போடுகிற பழக்கம் உள்ளவரா நீங்கள் ?
இதோ, உங்களுக்கு உதவுவதற்கு என ஐந்து நிமிட விதிகள் இரண்டை, நாம் பார்க்கலாம்.
‘ஐந்து நிமிடத்திற்குள் முடிக்கக் கூடிய எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள்’ என்பது முதல் விதி.
பொதுவாக சின்னச் சின்ன வேலைகளைத் தள்ளிப் போடுவதன் மூலம் அது பின்னாளில், பெரிய மன உளைச்சலைத் தரும் அளவுக்கு மாறக்கூடும்.
ஆனால், நீங்கள் அப்போதே செய்யத் தொடங்கினால், அந்த வேலையை முடிக்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது.
ஒரு கடிதத்தை டைப் செய்வது, பேப்பர்களை பைல் செய்வது, பைலை எடுத்து அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, இரண்டு இ-மெயில்களை அனுப்புவது என சிறு, சிறு வேலைகளை அவ்வப்போதே முடிக்க வேண்டும் என்பதுதான் இந்த விதி சொல்லும் விஷயம்.
இன்னொரு விதமான ஐந்து நிமிட விதியும் உண்டு. அது, ‘நீங்கள் தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வரக்கூடிய ஒரு வேலையை, ஐந்து நிமிடம் ஒதுக்கி செய்யத் தொடங்குங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து உங்களுக்கு அந்த வேலையைச் செய்யப் பிடிக்கவில்லை என்றால் அதைத் தவிர்த்து விடலாம்’ என்பது தான்.
ஆனாலும் பெரும்பாலானோர் அதை விரைவாய் முடித்துவிட்டு, இதற்குப் போய் இவ்வளவு நாள்கள் தள்ளிப் போட்டோமே என்று வருத்தப்படுவார்கள். மேலும், தொடங்கிய அந்த வேலையை முழுவதுமாக முடித்துவிட்டுத் தான், அடுத்த வேலையையே பார்க்கத் தொடங்குவார்கள்.
ஆக, ஒரு வேலையைத் தொடங்குவதில் தான் நமக்கு பிரச்சனை இருக்கிறதே தவிர, அதைத் தொடர்வதிலோ, முடிப்பதிலோ கிடையாது.
இவை இரண்டையும் முயற்சித்துப் பாருங்கள்… தள்ளிப் போடுகிற குணம், உங்களை விட்டுத் தள்ளிப் போகும் !
– இராம்குமார் சிங்காரம், tamil motivational speaker in tamil nadu