அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் வசிக்கும் இயர்ல் (Earl) என்பவர், தனது மனைவி ஜோஸ்பின் டிக்சனுக்கு (Josephine Dickinson), வீட்டில் ஏற்படும் சிறு காயங்களை குணப்படுத்துவதற்காக பிளாஸ்டரின் மேல் சல்லடைத் துணியையும், அதன் மேல் மருந்தையும் வைத்து அதனை பிளாஸ்டிக் தாளால் மூடி ஒரு டப்பாவில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தார்.
வீட்டில் சிறு காயங்கள் ஏற்படும்போதெல்லாம் அவரது மனைவியும், பிள்ளைகளும் அதனை உடனடியாக எடுத்து சாயத்தின் மீது ஒட்டிக் கொண்டனர்.
அதற்கு முன்பு வரை இப்படி காயம் ஏற்பட்டால், மருந்தோடு சல்லடைத் துணியை வைத்து கயிறால் கட்டுவது வழக்கம். அப்படி கட்டுவதற்கு இன்னொருவரின் உதவியும் தேவைப்படும்.
இவர் பயன்படுத்திய பிளாஸ்டரும், பிளாஸ்டிக் தாளும் இன்னொருவரின் தேவையைக் குறைத்து விட்டது. இதனை ஜோஸ்பின் தான் பணியாற்றிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்நிறுவனத்திற்கும் இந்த ஐடியா பிடித்துப் போகவே, அப்போது உருவானதுதான் ‘பேன்டேஜி’ என்று நாம் வழக்கு மொழியில் சொல்லக்கூடிய, ‘பேன்ட்எய்ட்’ (Band-Aid) ஆகும். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் பேன்ட்எய்டின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நினைவில் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்களும், கூண்டுபிடிப்புகளும் பலரை கோடீஸ்வரர்களாக்கி இருக்கின்றன. புதிய ஐடியாக்களுக்காக நீங்கள் ரூம் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமில்லை,பிறரது நேரத்தை மிச்சப்படுத்தும் அல்லது செலவைக் குறைக்கும் எந்தக் கண்டுபிடிப்பும் வெற்றி பெறும்.
இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கம்ப்யூட்டர், டிவி., என எல்லா கண்டுபிடிப்புகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த வரிசையில், நீங்களும் உங்கள் துறையில் என்ன புதுமைகளைச் செய்தால் கோடீஸ்வரராக முடியும் என்று சிந்திக்கலாம்.
-இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu