கடன் வாங்குவது, பணத்தைக் கையாளுவது என்றாலே பெண்களுக்கு அலர்ஜி தான் ! அந்த அலர்ஜியைப் போக்குவதற்காக கடன் சார்ந்த சில அடிப்படை விஷயங்களை இங்கே தந்துள்ளோம்:
· நீங்கள் எவ்வளவு தொகையைக் கடனாகப் பெறலாம் ? உங்கள் சொத்து அல்லது வருமானத்தை விட இரண்டு மடங்கு தொகையைக் கடனாக வாங்கலாம். இதுதான் அதிகபட்ச வரம்பு.
· எவ்வளவு வட்டிக்கு கடன் வாங்கலாம் ? சொந்தத் தேவைக்கு என்றால் அதிகபட்சம் 12 % ; தொழிலுக்கு என்றால் அதிகபட்சம் 18 % வட்டிக்கு கடன் வாங்கலாம்.
· நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மூலம் பெரும் கடன் தொகைக்கு எவ்வளவு வட்டி விதிக்கப்படுகிறது ? தோராயமாக 40%.
· பொதுவில், டெபிட் கார்டில் வாழ்வது என்பது ஃப்ரிட்ஜில் வாழ்வது போன்றது. பதட்டம் இல்லாத குளிர்ச்சியான வாழ்க்கை அது. ஆனால், கிரெடிட் கார்டில் வாழ்வது என்பது அடுப்பின் மீது அமர்ந்திருப்பது போன்றது. எந்நேரமும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு வாழ்கிற வாழ்க்கை அது.
கடன் இல்லாமல் வாழ வேண்டுமானால் கீழே உள்ள
விஷயங்களையும் புரிந்து கொள்ளுங்கள்!
· எவ்வளவு அவசரமாகக் கடன் வாங்குகிறீர்களோ, அவ்வளவு அவசரத்தை திருப்பி செலுத்துவதிலும் காட்டுங்கள்.
· வட்டியை மட்டும் செலுத்துகிற கடன் என்றும் அடைபடாது
· நண்பர்கள் / உறவினர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். இறுதியில் நட்பும் / உறவும், பணமும் போய், மனஸ்தாபம் மட்டுமே மிஞ்சும்.
· வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாதவருக்கு மறுமுறை கடன் கிடைக்காது.
· கடன் வாங்கும் போது இ.எம்.ஐ. (EMI) எனப்படும் மாதாந்திர தவணை முறையையும், சேமிக்கும் போது எஸ்.ஐ.பி. (SIP) எனப்படும் மாதாந்திர சேமிப்பு முறையையும் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்
விசித்திரமான உலகம்:
· கடன் வாங்குவதற்கு யோசிக்காத இந்த உலகம், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் என சேமிக்கச் சொன்னால் பலமுறை யோசிக்கிறது.
· வாழ்க்கை விசித்திரமானது. கடன் கொடுத்தவனைத் தான் ‘கடன்காரன்’ என்று சொல்கிறது.
· இறுதியாக, நீங்க கடனுக்கேன்னு வாழ்ந்தீர்களானால் கடனில் தான் வாழ்வீர்கள். எனவே, உற்சாகமாக வாழத் தொடங்குங்கள்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu