fbpx
உங்கள் மதிப்பு, பல கோடி ரூபாய் ! | Your value is several crores of rupees!

Your value is several crores of rupees!
  • March 3, 2026

ஒரு பிச்சைக்காரன், ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு மண் ஓடு இருந்தது. நீண்ட நெடுங்காலமாக அதே ஆலய வாசலில்தான் அவன் அமர்ந்திருந்தான்.

அந்த ஆலயத்திற்குப் புதிதாக வந்த ஒரு பணக்காரர், வெளியே வருகிற போது இவனையும், இவனது மண் ஓட்டையும் பார்த்தார். காசு போடுவதற்காக கீழே குனிந்த அவர், மண் ஓட்டைப் பார்த்ததும் அரண்டு போனார்.

அந்தப் பிச்சைக்காரனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “எவ்வளவு ஆண்டுகளாக நீ பிச்சை எடுக்கிறாய் ?” என்று கேட்டார்.

“நாங்கள் மூன்று தலைமுறைகளாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

“வா ! காரில் ஏறு” என்றார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனும் ஏறி அமர்ந்தான். அவனை அழைத்துக்கொண்டு தன்னுடைய நகைக் கடைக்கு சென்றார். அவனை ஓரமாக அமர வைத்துவிட்டு அந்த மண் ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் பதைபதைத்துப் போனான்.

“ஐயா ! இது எங்களுடைய பரம்பரைச் சொத்து. இதுதான் எங்களுக்கு வாழ்வாதாரமே…. இதை ஏன் சுரண்டுகிறீர்கள் ?” என்று கண்ணீர் விட்டான்.

“கொஞ்சம் பொறுமையாக இரு” என்று சொல்லிவிட்டு, முழுவதுமாக சுரண்டினார்.

என்ன ஆச்சரியம்… !அவர் சுரண்ட, சுரண்ட உள்ளே இருந்த தங்கப் பாத்திரம் கண்ணில் படத் தொடங்கியது. ஆம் ! ஏறக்குறைய ஒன்றரை கிலோ எடை கொண்ட தங்கப் பாத்திரம் அது. அந்தத் தங்கம் வெளியே தெரியாதபடி மண்ணால் முன்பு பூசப்பட்டிருந்திருக்கிறது. அவ்வளவு தான்.

அந்தத் தொழிலதிபர், பிச்சைக்காரனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த ஓட்டின் மதிப்பு, சுமார் ஒரு கோடி ரூபாய். மூன்று தலைமுறைகளாக இதன் மதிப்பே தெரியாமல் நீங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை வைத்துக்கொண்டு இனிமேலாவது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழத் தொடங்கு” என்று சொல்லி அனுப்பினார்.

நண்பர்களே ! மண் ஓடு என்பது ஒரு குறியீடு தான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்தத் தங்கப் பாத்திரம் மாதிரி ஏகப்பட்ட திறமைகள் குவிந்திருக்கின்றன. உங்களுக்கு சமைக்கத் தெரியும் என்றால் போதும். ரோட்டோரக் கடை நடத்துவதற்குப் பதிலாக, கேட்டரிங் தொழில் நடத்தி, கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

உங்களுக்கு பொருளை விற்கத் தெரிந்திருந்தால் போதும்… அமேசான் மாதிரி லட்சம் கோடிகளில் வியாபாரம் செய்கிற நிறுவனத்தைக் கூட நடத்த முடியும்.

ஆம் ! நமது திறமையைக் கண்டறிந்து, அதை வணிக மயப்படுத்தினால், கார்ப்பரேட் நிறுவனமாக உயர்ந்து, கோடிகளைச் சம்பாதிக்கலாம்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.