வானில் பறக்கும் ஏரோபிளேனைக் கண்டுபிடிப்பதற்காக 1900ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானி சாமுவேல் லாங்லி (Samuel Langley) மாபெரும் திட்டத்தை வடிவமைத்தார்.
அந்தக் காலத்தில் அதிகம் மதிக்கப்பெற்ற விஞ்ஞானி அவர் என்பதால் அவருக்கு உதவ பலரும் முன்வந்தனர். அவர் உலகப் பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அவருடைய ஆலோசனைக் குழுவில் அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஆன்ட்ரூ கார்னெகி உள்ளிட்ட பல அறிவாளிகள் இடம் பெற்றிருந்தனர். அமெரிக்க அரசும் அவருக்கு 50 ஆயிரம் டாலரை நிதி உதவியாக வழங்கியது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகையாகும்.
அவர் விமானத்தை எப்பொழுது கண்டுபிடிப்பார் என்று அமெரிக்காவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.
இது ஒருபுறமிருக்க, அந்த இடத்திலிருந்து சில நூறு மைல்கள் தொலைவில் ரைட் சகோதரர்கள் (Wilbur Wright and Orville Wright) வானில் பறக்க வேண்டும் என்கிற வெறியில் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் அங்குள்ள ஒரு சைக்கிள் கடையில் நாள்தோறும் சந்தித்து பட்டப்படிப்பைக்கூட முடிக்காத தங்களது நண்பர்களின் உதவியுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர். இவர்களுக்கு அரசின் நிதி உதவியோ, அறிவாளிகளின் உறுதுணையோ, பொதுமக்களின் ஆதரவோ எதுவுமே கிடையாது.
1903ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வானில் ஒரு சிறிய விமானம் பறப்பதை அமெரிக்க மக்கள் கண்டனர். அது ரைட் சகோதரர்களுடையது. வசதி வாய்ப்புடன் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி சாமுவேல் லாங்லியால் முடியாத ஒன்று, இவர்களால் எப்படி சாத்தியமானது? இவர்களுக்குள் இருந்த வானில் பறக்க வேண்டும் என்கிற ‘தீவிரம்’.
வாழ்க்கையில் முன்னேற இலக்குகள் தேவை. அந்த இலக்குகளை அடைய தீவிரம் அவசியம் இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘வெறித்தனம்‘ அவசியம். வெறும் இலக்கு மட்டும் கொண்டிருப்போர், அந்த இலக்கை அடைவதற்கான தடைகளை எதிர்கொள்ளும்போது, சோர்ந்துபோய் பின்வாங்கி விடுகிறார்கள். ஆனால், வெற்றியாளர்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுகிறார்கள். எதிர்மறையாக எது நடந்தாலும் அதைப் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
தாம் ஆண்டாண்டு காலமாக கண்டுபிடித்து குறிப்பெடுத்து வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் ஆய்வகத்தில் எரிந்துபோனபோதும்கூட தாமம் ஆல்வா எடிசன் சோர்ந்து போய்விடவில்லை. “நான் செய்த தவறுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன” என்றே சொன்னார்.
ஒரு காதே செவிடாகி போனபோது கூட, வெளி உலகச் சத்தங்கள், இனி என் கவனத்தை திசை திருப்பாது‘ என்றே அவர் மகிழ்ந்தார் அதுதான் தீவிரம். ஆனால், தீவிரம் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள்?
– வங்கியில் கடன் கிடைக்கவில்லை,
– அரசு அதிகமாக வரி விதிக்கிறது.
– வேலையாட்கள் நிலைத்து நிற்பதில்லை,
– வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை வர்த்தகத்தை பாதிக்கிறது…
என தொடர்ந்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்; சாதிப்பதற்கு இலக்கு மட்டும் போதாது. நிறைய முயற்சியும், தீவிரமும், வெறியும் வேண்டும். இதுதான் வெற்றிக்கான சூத்திரம்.
_ இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu