ஒரு பணக்கார அமெரிக்கர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார். இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால் தமது விலையுயர்ந்த புதிய காரையும் கப்பல் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வந்திருந்தார். அவர் காரிலேயே மாநிலம், மாநிலமாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் இடமெல்லாம் காரைப் பார்ப்பதற்காகவே ஏகக்கூட்டம் கூடியது. அந்தக் காரில் ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி என எல்லா வசதிகளும் இருந்ததால் மக்கள் வியப்புடன் தொட்டுத் தொட்டுப் பார்த்தனர்.
பயணத்தின் ஒரு கட்டமாக பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த மாநிலத்திற்குப் பயணமானார். செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் அந்த வண்டி பழுதாகி நின்று விட்டது. காரை எப்படிச் சரி செய்வது என்று தெரியாமல் திகைத்து அந்த அமெரிக்கர் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிட்டார். இது போன்ற ஒரு புதுவகை காரையே பார்த்திராத இந்தியர்களால் எப்படி இதன் ரிப்பேரைச் சரி செய்து தர முடியும் என்று ஐயப்பட்டார். அதுவும் கார் வாடையே அறியாத குக்கிராமத்தில் மெக்கானிக்கை எங்கே பிடிப்பது என்று புரியாமல் சோர்ந்து போனார்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு கிராமத்து சர்தார்ஜி இவரையும், காரையும் பார்த்தவுடன் விஷயத்தை புரிந்து கொண்டு “காரை நான் சரி செய்து தரட்டுமா?” என்று சைகையிலேயே கேட்டார். அவரை கேலியாகப் பார்த்த அமெரிக்கர், சரி என்று தலையாட்டினார். முன்புற பானெட்டைத் திறந்த சர்தார்ஜி கண்களால் ஆராய்ந்தார். பின்பு கொஞ்ச தூரம் நடந்து சென்று ஒரு பெரிய கல்லை எடுத்துக் கொண்டு வந்த இன்ஜினில் வெவ்வேறு இடங்களில் மூன்று முறை ஓங்கி தட்டினார்.
இதைப் பார்த்த அமெரிக்கர் பதறிப்போனார். அவருக்கு அழுகையே வந்து விட்டது. கண்களில் நீரோடு நின்று கொண்டிருந்த அவரைப் பார்த்து, ‘இப்போது ஸ்டார்ட் செய்யுங்கள்’ என்று சைகை காட்டினார் சர்தார்ஜி.
நொந்து போய் காரை அமெரிக்க ஸ்டார்ட் செய்ய… என்ன வியப்பு? கார் கிளம்பி விட்டது. ஒரே பரவசத்தில் கீழே இறங்கி ஓடி வந்து அந்த சர்தார்ஜியைக் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, ‘உங்கள் கட்டணம் எவ்வளவு?’ என்று கேட்டார். சர்தார்ஜியோ கொஞ்சமும் தயங்காமல் “பத்தாயிரம் ரூபாய்” என்றார். தொகையைக் கேட்டு வாய் பிளந்த அமெரிக்கர் “3 தட்டு தட்டியஅதற்கு 10 ஆயிரம் ரூபாய்யா?” என்று வினவினார். அதற்கு சர்தார்ஜி சொன்னார்.
“எங்கே தட்ட வேண்டும் என்று தெரிந்து தட்டினேனே, அந்த அறிவுக்கான தொகை தான் இது…” என்றார்.
எதையும் செய்வது எளிதானதே. ஆனால் எதை, எப்போது, எப்படிச் செய்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் கடினம். அதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும், தொலைநோக்குப் பார்வையும் மிக அவசியம். வருமான வாசலுக்கு மட்டுமல்ல… செலவின் பாதைக்கும் இது ரொம்பவே பொருந்தும்.
செலவைப் பாதியாகக் குறைப்பது மிகவும் எளிது. ஆனால் எந்தெந்த செலவைக் குறைப்பது… எப்போது குறைப்பது… எப்படிக் குறைப்பது? என்பது போன்ற புரிதல் தேவை.
அலுவலகத்தை அதிக நேரம் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் ஈட்டி, அதன் மூலம் நிலையான செலவுகளை குறைப்பது குறித்து இப்போது பார்ப்போமா..?
நீங்கள் அலுவலகத்திற்கு வாடகை கொடுக்கும்போது அலுவலகத்தை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் வாடகை தருகிறீர்கள். ஆனால் 8 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தி விட்டு மீதம் 16 மணி நேரம் அலுவலகத்தை மூடிவிடுகிறீர்கள்.
மாதமொன்றுக்கு வாடகை, சம்பளம் என நிலையான செலவு ரூ 50,000 ஆகிறதென்றால், 50 பொருட்களை உற்பத்தி செய்தால், நிலையான செலவு என்பது ஒரு பொருளுக்கு ரூ. 1,000 ஆகும். அதற்கு பதிலாக 20 பொருட்களை உற்பத்தி செய்தால் நிலையான செலவு பொருட்களுக்கு ரூ. 500 ஆகக் குறைந்து விடுமல்லவா? இது தான் நுணுக்கம்.
இதற்கு ஒரு ஷிஃப்ட் பணியாற்றுவதற்குப் பதிலாக 2 ஷிஃப்ட் களோ, 3 ஷிஃப்ட் களோ பணியாற்றலாம்.
இந்த ஷிஃப்ட் வேலையெல்லாம் உற்பத்தித் தொழில்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நீங்கள் எண்ணத் தேவை இல்லை. சேவைத் தொழில்களான பி.பி.ஓ, கால் சென்டர், வங்கி ஏ.டி.எம், மருத்துவமனை, பத்திரிக்கை, ஊடகங்கள் என பல துறைகளிலும் இது நடைமுறையில் உள்ளது.
இந்த உத்தி நம்மூர் தொழில்முனைவோருக்குத் தெரியாமல் இல்லை. பலசரக்குக் கடைகள் நடத்துபவர்களைப் பார்த்தால் தெரியும். காலை 6 மணிக்கு கடை திறந்தால் இரவு 10 மணி வரை அதாவது இரண்டு ஷிஃப்ட்கள் கடுமையாக உழைப்பார்கள். மருந்துக் கடை நடத்துவோரும், பஸ் ஸ்டாண்ட் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கடை நடத்துவோரும் 24 மணி நேரம் கடை திறந்து வைத்திருப்பார்கள்.
பல நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஆண்டில் 365 நாட்களும் திறந்திருக்கின்றன.
இன்னொரு மிகப் பெரிய துணிக் கடையோ சற்று வேறுமாதிரி உத்தியைக் கையாண்டது. காலை 9 மணிக்கு வரும் ஊழியர்கள், இரவு 9 மணிக்கு மேல் அதிகம் களைப்படைந்து விடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளருக்கு விரித்துக் காண்பித்த எண்ணற்ற துணிகளை எல்லாம் மடித்து அடுக்கி வைக்க வேண்டிய பணி வேறு இருந்தமையால் அவர்கள் நிறையத் துணிகளை வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்க மறுத்து, வீட்டுக்குக் கிளம்புவதிலேயே குறியாக இருந்தனர். இதனைக் கண்ட நிர்வாகம் புத்திசாலித்தனமாக ஒரு வேலையைச் செய்தது. அதாவது ஊழியர்கள் வீட்டுக்குக் கிளம்பும்போது துணிகளை மடித்து வைக்க தேவையில்லை. அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பலாம் என்று அறிவித்தது.
இரவு 10 மணிக்கு மேல் துணிகளை மடித்து, அடுக்கி வைக்கவும், கடைக்கு வந்திறங்கும் புதிய துணிகளை சரி பார்க்கவும், லேபிள் ஒட்டவும் இன்னொரு ஷிஃப்ட் பணியாளர்களை வேலைக்கு நியமித்தது. இதனால் தாமதமாக வரும் வாடிக்கையாளர்களும் நிறையத் துணிகளை புரட்டிப் பார்த்து மகிழ்வுடன் வாங்க முடிந்தது.
இன்னொரு கடையோ இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை ஷாப்பிங் செய்தால் சிறப்புத் தள்ளுபடி என்று அறிவித்தது. கூட்டம் இல்லாத நேரத்தில் விற்பனையைப் பெருக்க ‘ஹேப்பி ஹவர்ஸ்’ (Happy Hours) என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்வோடு நள்ளிரவு நேரத்திலும் கடைக்கு வரத் தொடங்கினர்.
ஆடித் தள்ளுபடி எப்படி உருவானது என உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக விவசாயிகள் தங்கள் கையில் காசில்லாமல் மிகுந்த வறுமையோடு இருக்கும் மாதங்களில் ஒன்று ஆடி மாதம் ஆகும். விளைபொருட்களை விற்றதனால் கிடைத்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டு வறுமையில் வாடுவர்.
தற்போது நாகரிகம் மாறி விவசாய வருமானத்தைவிட, பிற வருமானம் உயர்ந்து விட்ட போதிலும் மக்கள் ஆடி மாதம் துணிகளை வாங்குவதை அவ்வளவாக விரும்புவதில்லை. எனவே தள்ளுபடி என்ற பெயரில் மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, வியாபார நிறுவனங்கள் செய்த தந்திரம்தான் ஆடித்தள்ளுபடி.
பண்டிகை நேரங்களின் போது தள்ளுபடி வழங்காதீர்கள்
தள்ளுபடியிலும் சைவம், அசைவம் என்று இரண்டு வகை உண்டு. விலையை செயற்கையாக உயர்த்தி தள்ளுபடி என்று கூறி விற்கிற அசைவ உத்தி அதிக நாட்களுக்கு எடுபடாது. மக்களுக்கு இந்த விவரம் தெரிந்தால் கடையின் நற்பெயர் கெட்டுவிடும். இது போன்ற போலி தள்ளுபடி உத்திகளை கையாளாதீர்கள். இன்றைய வாடிக்கையாளர்கள் புத்திக் கூர்மையானவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
விற்பனை மந்தமாக இருக்கும்போது அம்மாத செலவை ஈடுகட்டவும், விற்பனையை அதிகரிக்கவும் உண்மையான தள்ளுபடி வழங்குவது இரண்டாவது சைவ வகை. ஒரு தொழிலில் லாபம் 30% இருக்குமானால் அதிகபட்சம் 15% வரை தள்ளுபடி வழங்கிவிட்டு, 10% விளம்பரத்துக்கு செலவழிக்கலாம். இதனால ஈ ஓட்டும் காலகட்டத்தில் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். வியாபாரத்தின் மாதாந்திர செலவுகளை ஈடுகட்டவாவது வருமானம் வரும். அதோடு, விற்காத சரக்குகளையும் விற்றுத் தீர்க்கலாம்.
விற்பனை சிறப்பாக நடைபெறக்கூடிய தீபாவளி, கிறிஸ்துமஸ், புதுவருடம், பொங்கல் போன்ற பண்டிகை நேரங்களில் தானாகவே விற்பனை நடைபெறும் என்பதால் அவ்வப்போது ஈட்டுகின்ற லாபத்தை வைத்து தான் ஆண்டு முழுவதும் கடை நடத்த வேண்டும். இத்தகைய தருணங்களில் தள்ளுபடியை அதிகரித்து லாபத்தைக் குறைத்துக் கொள்வதால் நீங்கள் லாபத்தை இழக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாறாக வணிகத்தை அதிகரிக்க ‘புதிய டிசைன்கள் அறிமுகம்’ ‘ஏராளமாக குவிந்துள்ள புடவைகள் என்றெல்லாம் பாசிட்டிவ் விளம்பரங்களை வெளியிட்டு வருவாயைப் பெருக்கி, அதன் மூலம் நிலையான செலவுகளின் சதவீதத்தை குறைக்கலாம்.
——– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil