‘ஆயிரம் கண்ணாடி வீடு’ என்ற ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. நீண்ட காலத்துக்கு முன்னால் ஒரு கிராமத்தில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட
ஒரு மாளிகையை அக்கிராமத்துப் பண்ணையார் கட்டியிருந்தார். சுற்றியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த மாளிகையை வியந்து பார்த்தனர்.
ஒரு நாள் தனது எஜமானோடு நாய் ஒன்றும் அந்த மாளிகை யைப் பார்க்க வந்தது. அந்த நாய் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தது. அறைகளில் கண்ணாடியைப் பார்த்தவுடன் அது அதே போன்று ஆயிரம் நாய்கள் அந்த அறையில் இருப்பதாகக் கருதியது. அவற்றைப் பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்து வாலை ஆட்டியது; உடம்பைக் குலுக்கியது; உட்கார்ந்தது; பிறகு எழுந்து நின்றது; முன் காலை மேலே தூக்கியது. இவை அனைத்தும் எதிரிலிருந்த நாய்களும் செய்ததால் தனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததாக எண்ணி மகிழ்வுடன் திரும்பிச் சென்றது.
சில மாதங்கள் கழித்து வேறொரு நாய் அதே மாளிகைக்கு வந்தது. அது சற்று கோபத்துடன் இருந்தது. உள்ளே வந்து கண்ணாடிகளைப் பார்த்தபோது அங்கு இது போன்ற ஆயிரம் நாய்கள் கோபத்தோடு இருப்பது தெரிந்து. இந்த நாய் முறைத்துப் பார்த்தது; ‘உர்ர்..’ என்றது; தலையை உலுக்கியது. கண்ணாடியைப் பார்த்து பாயப் போவது போல் நடித்தது. இவை அனைத்தும் கண்ணாடியில் தோன்றிய பிற நாய்களும் செய்வதாகக் கருதி அந்த இடத்தை விட்டு கோபத்தோடு வெளியேறியது.
உலகமும் இப்படித்தான். நீங்கள் அன்பு செலுத்தினால், பிறரும் உங்கள் மீது அன்பைச் செலுத்துவார்கள். நீங்கள் கோபத்தைக் காட்டினால், பிறரும் கோபமாக இருப்பார்கள். நீங்கள் சிக்கனமாகச் செலவழித்தால் உங்கள் பணியாளர்களும் சிக்கனமாக இருப்பார்கள். சுருங்கச் சொன்னால் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே விளையும்.
கோடிக்கணக்கான ரூபாய் புரளும் ஃபோர்ட் (Ford) நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் தொடங்கு நரான ஹென்றி ஃபோர்ட் , தொழிற்சாலையில் நடந்து செல்லும் போது ஸ்குரு, ஆணி, நட்டு என தரையில் கிடக்கும் சின்னப் பொருட்களை கூட எடுத்து ஸ்டோர்ஸில் சென்று கொடுத்து விட்டுச் செல்வாராம். இதைப் பார்த்து ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றுவோரும் அவரைப் பின்பற்றி எதையும் வீணாக்குவது இல்லை.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பயன்படாமல் வீணாக இழப்பு ஏற்படுத்தக் கூடிய பொருட்களை மிச்சப்படுத்தினாலே அது நிறுவனத்துக்கு கணிசமான லாபத்தை உண்டாக்கும். அப்படியான செலவு விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
காய்கறி, பால், பழம், பிரட் போன்றவை குறுகியகால பயன்பாட்டுப் பொருட்களாகும். இவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கேட்டரிங் தொழில் மற்றும் ஹோட்டல் தொழிலில் ஈடுபடுவதற்கு கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்வது சவால் நிறைந்த செயலாகும். சரியான அளவைத் தெரிந்து கொண்டு, கொள்முதல் செய்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.
மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், ரொட்டி, மிட்டாய் போன்ற உணவு பொருட்கள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்ற ஊட்டச்சத்து பவுடர் ஆகியன ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து காலாவதியாகிவிடும்.
எனவே, தற்போது தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவை எளிமையாகி விட்டபடியால் அதிகபட்சமாக இவற்றை ஒரு மாதத்துக்கு மட்டுமே இருப்பு வைத்துக் கொள்வது நல்லது.
எல்லாத் தொழிற்சாலைகளிலும் குறைந்த பட்சம் 2% பொருட்களாவது கழிவாக வீணாகும். ஆடைகள் உற்பத்தியின் போது துண்டுத் துணிகள், தோல் பொருள் தயாரிப்பின்போது கழியும் தோல்கள், நோட்டுப் புத்தகம் தயாரிக்கும் போது கழியும் காகிதங்கள் என தொழிற்சாலைகளில் பொருட்கள் வீணாவது அனைவரும் அறிந்ததே.
இப்படி வீணாகும் பொருட்களை ‘மறுசுழற்சி’ செய்ய முயற்சிக்க வேண்டும்.
பனியன் உற்பத்தி தொழிற்சாலைகளில் வீணாகிப் போகும் பனியன் துணிகளை, பிரிண்டிங் பிரஸ், லேத் பட்டறை போன்ற இடங்களில் இயந்திரங்கள் துடைக்க விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளிலும் இப்படி வீணாகும் ஸ்க்ராப் (Scrap) களை குறைந்த விலைக்கேனும் விற்கவோ அல்லது மறு சுழற்சி செய்யவோ இயலுமா என்று பார்க்கலாம்.
எண்ணெய், தண்ணீர், பால் போன்ற திரவப் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள், அவற்றின் பைப் சரியாக மூடாததாலோ அல்லது டேங்கில் உள்ள சிறு துளையினாலோ ஏற்படும் கசிவின் காரணமாக ஆண்டுதோறும் நிறுவனத்துக்கு கணிசமான தொகை இழப்பு ஏற்படுகிறது.
இவற்றைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு முறை சரக்கை ஏற்றும் முன்பும், சரக்கை ஏற்றிய பின்பும் ஒழுகுகிறதா என்பதை பரிசோதித்துப் பார்க்க ஆட்களை நியமிக்க வேண்டும். தரக் கட்டுப்பாட்டுத் துறை போன்று, கசிவுக் கட்டுபாட்டு துறையும் தொழிற்சாலைகளில் இருக்க வேண்டியது அவசியம்.
கசிவு என்பது லாரிகளில் மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை. பைப் லைனிலோ, கொள்கலனிலோ, பேக் செய்யப்படும் பாக்கெட்டுகளிலோ கூட ஏற்படலாம்.
துருப்பிடிக்கும் பொருட்கள் மீது, மழைத் தண்ணீரோ, ஈரக்காற்றோ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயனற்றுப் போகும் பொருட்கள் இருந்தால், அவற்றை கவனித்து கையாள வேண்டும்.
சில பொருட்கள் நம்மையும் அறியாமல் காலப் போக்கில் காணாமல் போய்விடும். இதற்கு பல காரணங்கள் உண்டு. நம் அலுவலக ஊழியர்கள் அப்பொருள் தூசி படிந்து போயிருப்பதால் அதனை தூக்கி எறிந்து இருக்கலாம்.
சில பொருட்களை பிறருக்கு கடனாக வழங்கி இருப்போம். நம் ஊரில் பலர் கடனாக பெறுகின்ற பொருளை அவர்கள் ‘நன்றிக்கடன்’ என்று நினைத்து திருப்பித் தருவதில்லை. நாம் நினைவுபடுத்திக் கேட்காவிட்டால் அதுவும் தொலைந்து போவதற்கு சமமே. எனவே, நாம் பிறருக்கு கடன் கொடுக்கும் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றை நினைவூட்டி திரும்பி வாங்குதல் வேண்டும். எந்தப் பொருளை கடன் கொடுத்தாலும் அவற்றை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறிய ரிப்பேரைச் சரி செய்யாததால் பயனற்றுப் போகும் பொருட்கள் என்று சில உண்டு. அண்மையில் ஒரு தொழிற்சாலைக்கு சென்றிருந்தபோது ஒரு அறையில் கை ஒடிந்த, கால் துண்டான, சக்கரம் கழன்றிருந்த, ஸ்குரு விழுந்து காணாமல் போன பத்துக்கும் மேற்பட்ட சேர்களை அடுக்கி வைத்திருந்தார்கள். அவை தூசி படிந்து பழுதாகக் கிடந்தன. சிரமம் பாராது ஒரு தச்சரை அழைத்து அவற்றை அவ்வப்போது ரிப்பேர் செய்யச் சொல்லி இருந்தால் குறைந்தபட்சம் சில ஆயிரங்களை அந்நிறுவனம் மிச்சப்படுத்தி இருக்கலாம்.
இது போன்று சிறிய சிறிய ரிப்பேர்களைச் சரி செய்ய சோம்பேறித்தனப்பட்டு அதனால் நாளடைவில் பேரீச்சம் பழ மாகிற பொருட்களும், இயந்திரங்களும் ஏராளம்.
தொழில்நுட்ப மாற்றத்தால் பயன்படுத்த இயலாமல் போகும் பொருட்களை வாங்கும்போது கவனத்துடன் இருந்தால், பிற்பாடு ஏற்படும் பெரிய இழப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
ரிப்பேர் செய்ய இயலாத சில பொருட்களும் உண்டு அந்தக் காலத்து ரேடியோ, டி.வி, கம்ப்யூட்டர்கள், செல்போன் போன்றவற்றை இப்போது பயன்படுத்த நினைத்தாலும் அவற்றுக்கான உதிரிப் பொருட்கள் சந்தையில் கிடைப்பதில்லை. பெரும்பாலான பழைய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைப் பழுது நீக்குவதற்குச் செலவழிப்பதை விட அந்தப் தொகையில் புதிய பொருட்களை வாங்கி விடுவதே புத்திசாலித்தனம்.
மெர்க்குரி விளக்குகள் வந்த பிறகு, பெட்ரோமாக்ஸ் விளக்குகள் ஒதுங்கி விட்டன. கேஸ் அடுப்பு தோன்றிய பிறகு, விறகு அடுப்புகளுக்கும், மண்ணெண்ணெய் அடுப்புகளும் இல்லாமல் போய்விட்டன. செல்போன் வந்த பிறகு, பேஜர் என்ற கருவி போன இடமே தெரியவில்லை. இப்படிப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களால் பல பொருட்கள் காணாமல் போய்விடுகின்றன. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மிக வேகமாக அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்பதை மனதில் நிறுத்தி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை லேட்டஸ்ட் மாடல் களாக வாங்கவேண்டும். தேவையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதே இதற்குத் தீர்வு.
ஒருவேளை பொருட்களைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றால் ஏலத்திலோ அல்லது வந்த விலைக்கோ விற்று காசாக்கி விடுவதே புத்திசாலித்தனம்.
————-இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker