தொழிலாளி, முதலாளி ஆக முடியுமா..? இக்கேள்வி பலருக்கும் எழும் முக்கியமான ஒன்று. வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும்.
வேலையை உதறிவிட்டுத் தொழில் தொடங்கலாமா… அல்லது வேலையில் இருந்து கொண்டே தொழில் தொடங்கலாமா? இது அடுத்த கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு என்ன விடை?
உங்களில் எத்தனை பேர் கிங்க் வால் குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவதைத் கூர்ந்து பார்த்திருக்கிறீர்கள்? அது எடுத்தவுடன் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவி விடாது. முதலில் தன் வாலை அடுத்த மரத்துக் கிளையில் சுற்றிக்கொண்டு, தாம் விழ மாட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த பிறகே அந்த மரத்திற்குத் தாவும். இதற்கு ‘பற்றி விடுதல்’ என்று பெயர்.
இதுபோல் ‘விட்டுப் பற்றுதல்’ என்பதும் உண்டு. நாம் +2 முடித்த பிறகு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அல்லவா? அப்பொழுது கல்லூரியில் சீட் கிடைத்தால் தான் நான் +2 முடிப்பேன் என்று அடம் பிடிக்க முடியுமா? இதேபோல் சில விஷயங்கள் கையை மீறி நடக்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில் ‘விட்டுப் பற்றுதல்’ சித்தாந்தம் தான் பொருத்தமாக இருக்கும்.
தொழிலைப் பொறுத்தவரையில் இரண்டும் சரியே. ஒரே வேறுபாடு என்னவென்றால் முன்னது பாதுகாப்பானது. பின்னது ‘த்ரில்’ லானது. அவ்வளவுதான். நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல், ஆற்றின் போக்கிலேயே போகும் இலை போல் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுவதும் ஒரு த்ரில் தானே !
தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு, பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை உதறுவதற்கு முன், மனதில் பல பயங்களும் ஐய ங்களும் எழக்கூடும்.
- வேலையை விட்டுவிட்டுத் தொழில் தொடங்குவதை குடும்பத்தினர் ஒப்புக் கொள்வார்களா?
- நான் இந்த வேலையை விட்டால் குடும்பச் செலவை சமாளிக்க பணம் புரட்டுவது எப்படி..?
- வேலையை விடுவது என்று தீர்மானித்து விட்டால் எப்போது, அந்த வேலையை உதறுவது?
- மாதந்தோறும் கிடைத்து வந்த சம்பள இழப்பு தவிர, தொழிலை நடத்த ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பது எப்படி?
- நான் தொடங்கும் தொழில் வெற்றிகரமாக அமையுமா?
- வெற்றிகரமாக அமையாத வேளையில் என் குடும்பமும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் என்னாவது?
- தொழிலைத் தொடங்கிய பிறகு நான் பெற்று வந்த மாதச் சம்பளத்தை லாபமாகப் பெற எவ்வளவு மாதங்கள் ஆகும்?
இந்த வினாக்களுக்கு விடை தேடுகிற அதே வேலையில் கீழே உள்ள 10 ஆலோசனைகளையும் மனதில் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு வேலை கொடுத்தவரிடம் இருந்து சுமூகமான முறையில் கைகுலுக்கிக் கொண்டு நண்பராக வெளியே வரவேண்டும். உங்களுடைய குணாதிசயமும், பண்பு நலனும் அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவரே கூட பின்னொரு நாளில் உங்களது வாடிக்கையாளராக மாறலாம். மேலும் தொழில்முனைவர் ஆவதற்கு முதல் தகுதியே அனைவரையும் அனுசரித்துப் போவதுதான்.
- நீங்கள் தொடங்கவிருக்கும் தொழிலுக்கான திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு, அரசு அனுமதி, அலுவலக இடம், லெட்டர்பேட், விசிட்டிங் கார்ட் அச்சடித்தல் போன்ற பணிகளை, வேலையை விடுவதற்கு முன்பே முடித்து விடுவது உத்தமம்.
- வேலையை விட்ட மறுநாளிலிருந்து வழக்கம் போல் நீங்கள் உங்கள் சொந்த அலுவலகத்திற்குச் செல்லத் தொடங்கிவிட வேண்டும். ஓய்வு எடுத்தல் தொழிலுக்கான எண்ணங்களை (Idiea) யோசித்தல், இடம் தேடுதல் போன்ற தொடக்கநிலை வேலைகளில் ஈடுபடுவதால் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் தள்ளிப்போகும்.
- சிலர் பகுதி நேரமாக தொழிலைத் தொடங்கி அதற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிறகு வேலையை விடலாம் என்று எண்ணக்கூடும். ஒரு வகையில் அது நியாயமாகப் பட்டாலும் கூட முதல் வாடிக்கையாளர் கிடைத்தவுடனாவது வேலையை விட்டு விடுவது நல்லது. இல்லை எனில் உங்கள் சொந்த வாடிக்கையாளரையும் மனநிறைவு செய்ய முடியாது; நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கும் நன்றியோடு நடந்து கொள்ள முடியாது.
- நீங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்புகளை நம்பி புதிய தொழிலில் இறங்காதீர்கள். நீங்கள் வேலை பார்த்த நிறுவனம் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம்; அதில் ஒரு பெரிய பொறுப்பில் நீங்கள் பணியாற்றலாம். ஆனால், அந்த மதிப்பும், தொடர்பும் உங்களுக்கானது அல்ல… நிறுவனத்துக்கானது. நீங்கள் வேலையை உதறியவுடன் ஒரு சாதாரண மனிதராக ஆகி விடுகிறீர்கள். முன்பு உங்கள் பதவிக்காகவும், உங்கள் நிறுவனத்திற்காகவும் மதிப்பு செலுத்தியவர்கள் நீங்கள் வேலையை உதறிய பிறகு அந்த மதிப்பைக் குறைத்துக் கொள்ளக்கூடும். சிலர் உங்களைப் பொருட்படுத்தாமல் கூட போகலாம். எனவே பழைய தொடர்புகள் அனைத்தும் உதவியாக இருக்கும் என்றெல்லாம் பெரிதாக எதிர்பார்க்காதீர்கள்.
- நீங்கள் பணியாற்றுகிற நிறுவனம் பெரிய நிறுவனமாக இருந்து, அதில் நீங்கள் பெரிய பொறுப்பை வகித்து வந்தால் உங்களுக்கு ஏ. சி. அறை, கார், வீடு, போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருக்கலாம். விமானத்தில் நீங்கள் உயரப் பறந்து இருக்கலாம். உயர்தர விடுதியில் தங்கி இருக்கலாம். ஆனால், இந்தச் சலுகைகள் அனைத்தையும் புதிதாகத் தொழில் தொடங்குகின்ற போது எதிர்பார்க்கக் கூடாது. தொழிலில் லாபம் வரத் தொடங்கிய பிறகுதான் உங்களுக்கான வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் வேலையை உதறிவிட்டுத் தொழில் தொடங்குவதாகச் சொன்னால் பலரும் உங்களது ஆர்வத்தை குறைக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பர். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு ஊக்கமாகச் செயல்படத் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கப் போகிற தொழில் உறுதியாக வெற்றி அடையும் என்று முதலில் உங்கள் மனைவி, குழந்தைகள், பெற்றோர் போன்றோரை நம்ப வைத்து அவர்களது முழு ஈடுபாட்டையும் பெற முயற்சி செய்யுங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். பிற சுற்றத்தாரின் ஆதரவு பற்றி அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை.
- தொழில் தொடங்கும்போது உங்களைச் சுற்றியுள்ள பலரும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குவர். எனவே, முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், அதிக ஈடுபாட்டுடனும் இருப்பது போன்று உங்களை வெளிக் காட்டிக் கொள்வது முக்கியம்.
- தொழில் நலிவடைந்தால் எப்போது, எப்படி வெளியே வருவது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தொழில் தொடங்குகிறபோது, அத்தொழில் நஷ்டம் அடைந்தால் என்னாவது என்று எதிர்மறையாகச் சிந்திப்பது தவறு என்றாலும் எந்த ஒரு திட்டத்திற்கும் 100 % சதவீத வெற்றி வாய்ப்பு உறுதி கிடையாது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி அத்திட்டம் நட்டத்தில் இயங்குமானால் எந்தக் கட்டத்தில் நாம் வெளியே வந்து நட்டத்தைக் குறைக்க வேண்டும் என்பதையும் திட்டமிடுவது புத்திசாலித்தனம்.
- சிந்தனை வேறு; நடைமுறை வேறு என்பதில் மாறுபடாதீர்கள். தொழில்முனைவர் மனதில் தோன்றும் புதிய சிந்தனைகள் எல்லாமே நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது கேள்விக்குறியே. மேலும் அச்சிந்தனையை தொழிலாக மேற்கொண்டால் லாபம் ஈட்ட முடியுமா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பது என்பது நல்ல சிந்தனைதான். தமிழகத்தில் 7 கோடி பேர். இதில் 2 கோடி குழந்தைகள். இவர்களின் சென்னையில் மட்டும் குறைந்தது 25 லட்சம் பேர். இதில் வீட்டிலேயே கம்ப்யூட்டர் வைத்திருப்போர் இரண்டரை லட்சம் என்று கொண்டாலும், அதில் 2,500 பேர் கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். என்று ‘ரமணா’ படத்தில் வருவது போல புள்ளிவிவரம் எடுப்பது சிந்தனைக்கு சரி. இந்த சிந்தனைக்குத் தொழில் வடிவம் கொடுக்கும் நோக்கில் என். ஐ.ஐ.டி லெடா (NIITLeda), ஃபோர்த் ஆர் (Fourth R), ஐ.டி .கிட்ஸ் (IT Kids) எனப் பல நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை எல்லாமே தோல்வியுற்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மற்றொரு சான்று, அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஸ்கவுண்ட் கார்டுகள் ’ சில ஆண்டுகளுக்கு முன்னால் கிரெடிட் கார்டுகளை போல டிஸ்கவுண்ட் கார்டுகளையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. நீங்கள் ரூ100 கொடுத்து அந்தக் கார்டை விலைக்கு வாங்கினால், உங்கள் நகரில் உள்ள சுமார் 100 கடைகளில் எல்லாப் பொருள்களையும் 5 % முதல் 15% வரை தள்ளுபடியில் வாங்கலாம். கார்ட் விற்பவருக்கும் லாபம்… வாங்கியவருக்கு தள்ளுபடியில் லாபம்… கடைக்காரருக்கு கூடுதல் விற்பனையால் லாபம் என்ற இந்தச் சிந்தனை கேட்பதற்கு புதுமையாக, நல்ல லாபம் தருவது போன்று இருந்தது. ஆனால்,நடைமுறைப்படுத்தப்பட்ட போது பெரும் தோல்வியையே சந்தித்தது.
சரி… அப்படியானால் எந்தச் சிந்தனையை வெற்றித் தரக்கூடிய தொழிலாக மாற்ற முடியும்? மேலைநாட்டு நிர்வாக நெறிப்படி, எந்த ஒரு சிந்தனை உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறதோ, வேலைப்பளுவைக் குறைக்கிறதோ, நேரத்தை மிச்சப்படுத்துகிறதோ, வசதியை அதிகரித்து தருகிறதோ… அவை எல்லாம் தொழில் வாய்ப்புள்ள சிந்தனைகள் ஆகும்.
அதாவது வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், மைக்ரோ வேவ் ஓவன், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை பயன்பாட்டாளரின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வேலைப் பளுவையும் குறைகின்றன. இதனால் இவை வெற்றிபெற்றன. ஏர்கண்டிஷனர். ரிசார்ட், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவையெல்லாம் மனிதர்களின் வசதிகளை அதிகரித்தமையால் வெற்றி பெற்றன.
இந்த ரீதியில் நீங்களும் யோசித்தால் உங்களது சிந்தனையையும் தொழிலாக மாற்ற இயலும்.
_ இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker